search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிஜா வைத்தியநாதன்"

    தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓபிஎஸ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. #OPSYagam
    சென்னை:

    தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
    இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 
    தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை என்றார்.



    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக, ஆனூர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அதில், உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்ததையொட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #OPSYagam
    2019‍-ம் ஆண்டுக்குள் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். #SivanthiAditanar #Manimandapam #KadamburRaju
    சென்னை:

    சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிய அதேநேரத்தில் திருச்செந்தூரில் சிவந்தி அகாடமியில் விழா நடைபெற்றது. விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமை தாங்கினார்.

    விழாவில் மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இன்று முதல் அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மணிமண்டப பணிகள் வேகமாக நடைபெறும். மணிமண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலை அமைக்கப்படும். 2019‍-ம் ஆண்டுக்குள் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியதும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழக முதல்-அமைச்சர் கடந்த 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இம்மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.

    இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்துக்கு இன்று அடிக்கல் நாட்டிய தமிழக முதல்-அமைச்சருக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதைத்தொடர்ந்து மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், நான் சிவந்தி ஆதித்தன் பேசுகிறேன். எனது தாத்தா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டியமைக்கு என் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதையடுத்து பா.ஆதவன் ஆதித்தன் நன்றி தெரிவித்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் அவர்களுக்கு வணக்கம், எனது தாத்தா பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டிய முதல்- அமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அடிக்கல் நாட்டப்பட்டதும் காணொலி காட்சியில் மணிமண்டபத்தின் முழு மாதிரி தோற்றம் காட்டப்பட்டது. இதை தொடர்ந்து மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கின.

    பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

    விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவித்தார்கள்.

    விழாவில் எம்.பி.க்கள் பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வசந்தகுமார், இன்பதுரை.

    திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்த ராஜ், தாசில்தார் தில்லை பாண்டி, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தனன்.


    முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தட்சணமாற நாடார் சங்க முன்னாள் தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் வி.பி.துரை, வக்கீல் காமராஜ், நெல்லை மேற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ், காமராஜர் ஆதித்தனார் கழகம் சிலம்பு சுரேஷ், கருங்கல் ஜார்ஜ்.

    முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான்பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன், நெல்லை தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை, இந்து முன்னணி மாநில தலைவர் அரசு ராஜா, துணைத்தலைவர் ஜெயக்குமார்.

    பா.ஜனதா கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் செல்வராஜ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நெல்லை மாவட்ட சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற செயலாளர் தோப்புமணி, துணைத்தலைவர் தர்மர்.

    நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார், முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன் மற்றும் பல்வேறு கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். #SivanthiAditanar #Manimandapam #KadamburRaju
    தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த அனுமதி கேட்டிருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் கலந்து ஆலோசிக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    இதற்காக சந்திக்க அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது இதுவரை பிரதமர் அலுவலகம் எந்த முடிவும் எடுத்து பதில் அளிக்கவில்லை.

    என்றாலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. எனவே விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகளும் டெல்லி செல்ல இருக்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்கள் குறித்தும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் நிலுவையில் உள்ள நிதியை விரைவாக தரக்கோரியும் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.


    இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி குறித்து கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 12-ந்தேதிக்குள் பதிலளிக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இது குறித்தும் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்று தெரிகிறது.

    மேலும் தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு உள்ளது. கூட்டணி குறித்தும் பேசப்படும் என்று டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் சில முக்கிய தீர்வுகளை தருவதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். #PMModi #EdappadiPalaniswami
    தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய நீர்வளத்துறைக்கு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan
    சென்னை:

    தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரிய போராட்டம் மற்றும் உயிர்பலிக்கு பிறகு மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில், ஆலையை திறக்க விட மாட்டோம் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து மத்திய நீர்வளத்துறை தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தூத்துக்குடியில் நீர்வளத்துறையின் ஆய்வு தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தியது வீணானது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி நிலை திரும்பி உள்ள நிலையில், மத்திய நீர்வளத்துறையின் இந்த ஆய்வால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆய்வறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, நிலத்தடி நீர் தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமானதாக இல்லை எனவும், ஆய்வின் முடிவுகள் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக உள்ளதாகவும் கிரிஜா வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், தமிழக அரசை கேட்காமல், நீர் வளம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கிரிஜா வைத்தியநாதன் மத்திய நீர்வளத்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan
    தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரின் அனுமதி உத்தரவைப் பெறவேண்டும்.

    வெளிமாநிலங்களுக்கு அரசுத் துறை செயலாளர்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், தலைமைச் செயலாளர் மூலமாக முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

    அரசு துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், துறை செயலாளர்கள் அல்லது தலைமைச் செயலாளர் அல்லது முதல்-அமைச்சர் மூலம் அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும்.

    அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் தவிர மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்களின் மேல் அதிகாரியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தமிழகத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறை செயலாளரின் உத்தரவைப் பெறவேண்டும். #IAS ChiefSecretary #GirijaVaidyanathan
    ×